
கிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி
உலகின் முதல் மற்றும் பிரமாண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு. 1600-ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் ஆரம்பித்து 1874-ல் கலைக்கப்பட்டதுவரையான நிகழ்வுகள் விறுவிறுப்பான நடையில் விரிவாக இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
மூலதனத்தை எப்படித் திரட்டுவது, வர்த்தக அபாயங்களை எப்படி எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களிடமும் பொருட்களை வழங்குபவர்களிடமும் எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது, பங்குதாரர்களைத் திருப்தி செய்து, சமூகத்தோடு சுமுக உறவை ஏற்படுத்துவது எவ்விதம் என வணிகத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான விடைகள் கிழக்கிந்திய கம்பெனியின் அசாதாரணமான வரலாற்றில் அடங்கியுள்ளன.
ஆரம்பகட்ட கார்ப்பரேட் பாணி நிறுவனங்களில் ஒன்றான கிழக்கிந்திய கம்பெனி, அடுக்குமுறை நிர்வாக அமைப்பை உருவாக்கியது. அதையே பன்னாட்டு நிறுவனங்கள் இன்றும் பின்பற்றுகின்றன. இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு இணையானவற்றையே கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களும் எதிர்கொண்டனர்.
சுமார் 275 ஆண்டு வாழ்க்கையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனமாக கிழக்கிந்திய கம்பெனி எப்படி மாறியது? நவீன உலகில் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக உத்வேகம் அளிக்கும் நிறுவனமாக எப்படித் திகழ்கிறது? அதிகச் செல்வத்தை உருவாக்கிய அதே சமயம் அதே அளவு சேதத்தையும் ஏன் அது விளைவித்தது? வன்முறையிலும், போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடவேண்டிய அவசியம் என்ன?
கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் விவரிக்கும் இந்நூல் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி இருக்கவேண்டும், இருக்கக்கூடாது இரண்டையும் கற்றுக்கொடுக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த ஒரு நிறுவனத்தின் கதை இது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தின் கதையும்கூட.