புத்தகம் படிக்கவெல்லாம் எங்கே சார் எனக்கு நேரமிருக்கு?'' என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அநேகம் பேர். காலை எழுந்தால் நடைபயிற்சி, பெண்ணாக இருந்தால் சமையல் வேலை, வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகத்திற்கு காரில் பயணம், வீட்டிற்கு வரும் நண்பர்கள், விருந்தினர்களுடன் பொழுது கழிப்புகள். மேற் சொன்ன எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் இந்த ஒலிப்புத்தகத்தை நீங்கள் படிக்க முடியும். நியூ ஹரிசான் மீடியாவின் முப்பெரும் பிரிவுகளான கிழக்கு, வரம், நலம் ஆகியவை இந்த ஒலிப்புத்தகங்களைத் தயாரித்து வெளியிடுகின்றன.
பொதுவாக ஒரு புத்தகத்தை ஒருவர் மட்டுமே படிக்கமுடியும். ஆனால் இந்த ஒலிப்புத்தகத்தின் வழியே ஒரே நேரத்தில் பல பேர் கொண்ட குழு ஒரு நாவலையோ, ஒரு வாழ்க்கை வரலாற்றையோ அறிந்து பயன்பெற முடியும் என்பதே இதன் சிறப்பு.
கிழக்கு பதிப்பகத்தின் மல்டி மீடியா தயாரிப்புத் துறையைச் சேர்ந்த வைதேகி சங்கரன் இதுகுறித்து பேசுகையில், தாய் மொழியாகிய தமிழை அறியாதவர்களுக்கு நல்ல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற இருக்கும் அவர்களுக்கு இந்த ஒலிப்புத்தகம் ஒரு பேருதவியாக இருக்கும். மிகச்சிறந்த நாவல்கள், சுகாதாரம், ஆன்மிகம், வரலாறு, சுயமுன்னேற்றம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நல்ல புத்தகங்களை ஒலி வடிவில் தயாரித்து, எல்லோரும் வாங்கும் அளவிலான சாதாரண விலைக்குத் தருகிறோம். கண் தெரியாதவர்கள் கூட இந்த ஒலிப்புத்தகத்தின் மூலம் நல்ல நாவலையோ, ஒரு வரலாற்று நூலையோ, சுயமுன்னேற்றக் கருத்துகளையோ அறிந்துகொள்ள முடியும். நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும் நாட்களில் இந்த ஒலிப்புத்தகங்கள் பெரும்பயன் கொடுக்கும். சென்னையில் நடந்த கடந்த புத்தகக் கண்காட்சியில் இந்த ஒலிப்புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.''
பொதுவாக நாம் புத்தகங்களை வாசிக்கையில் எழுத்தாளரின் மன அலைவலிசையோடு சிலசமயம் ஒன்ற முடியாமல் போய்விடும். அந்தக் குறைபாடுகள் இந்த ஒலிப்புத்தகங்களில் நிகழ வாய்ப்பில்லை'' என்று சொல்லும் பா. ராகவன் (தலைமை எடிட்டர்) அதன் காரணங்களை அழகாக விவரிக்கிறார்.
நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள், உரையாடல்களுக்கு ஏற்ப இந்த ஒலிப்புத்தகத்தில் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்து ஒலிக்கின்றன. சூழலின் தன்மைக்கேற்ப பின்னணி இசைக்கோர்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் மேன்மையான மன லயத்துடன் கூடிய ஒத்திசைவு இயல்பாக அமைந்துவிடுகிறது. இருபது வயதைக் கடந்த அனைவருக்கும் இன்றைய சூழலில் ஆங்கிலம் பிழைப்பு மொழியாகிவிட்டது. பாகுபாடின்றி அனைவரும் ஆங்கில வழிக்கல்வி படித்து வருகிறார்கள். காலச் சூழலில் தமிழ் பேச்சுமொழியாக மாறும் அபாயம் நிகழ வாய்ப்புள்ளது. தமிழ் படைப்புலகம் கேள்விக்குள்ளாகும் நிலையைத் தடுக்கவே இந்த ஒலிப்புத்தகம். தமிழின் மேல் ஆர்வம் ஏற்படச் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழி. தொலைக்காட்சி, இண்டர்நெட், சினிமா என்று இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழலில் ஊடகங்கள் அறிவுப்பூர்வமாக எதையும் செய்யத் தயாராக இல்லை. அந்நிலையிலிருந்து வேறுபட்டு நாங்கள் அம்பானி, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, பிடல் காஸ்ட்ரோ என்று சாதனையாளர்கள் மற்றும் சரித்திர நாயகர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் இரவுக்கு முன்பு வருவது மாலை எனும் ஆதவன் குறுநாவல் போன்றவற்றையும் சிறந்த சுயமுன்னேற்ற நூல்களையும் ஒலிப்புத்தகங்களாக உருவாக்கி உள்ளோம். இதுவரையில் இருபத்திநான்கு ஒலிப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வருட முடிவிற்குள் இது நூறாக உயரும்.''
கற்றலினும் கேட்டல் நன்று' என்னும் முதுமொழியை புது மொழியாக்குகிறது நியூ ஹாரிசன் மீடியா.
Labels: kizhakkuaudiobooks, Tamil, varamaudiobooks